அம்மாவின் தேன்குழல் சிறுகதைத் தொகுப்பு - அகநாழிகை வெளியீடு
இ துகாறும் நான் எழுதியுள்ள சிறுகதைகளின் தொகுப்பை ' அகநாழிகை பதிப்பகம் ' வெளியிட இருக்கிறது. இந்த நற்செய்தியை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் பேருவகை அடைகிறேன். தொகுப்பிலுள்ள பெரும்பான்மையான சிறுகதைகள் வல்லமை இதழில் வெளிவந்தவை. வல்லமை என் முகவரியின் முதல் வரி என்றால் அதில் துளியும் மிகையில்லை. சில சிறுகதைகள் சொல்வனம், திண்ணை மற்றும் சிறகு இதழ்களில் வெளியானவை. ஓரிரு கதைகள் பிரசுரமாகாதவை . உண்மையில் நான் ஒரு வாசகன் மட்டுமே. என் எழுத்து ஒரு கிளைவிளைவே. என்னுடைய நண்பர்கள் குழுவில் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களை எளிதாக எண்ணிவிடலாம். இலக்கிய உலகிலும் எனக்கு யாருடனும் பழக்கமில்லை. என்னைப் போன்ற ஏகலைவன்களுக்கு, துரோணர்களின் புத்தகங்களே குருநாதர்கள். எனக்குத் தெரிந்த பலர் புத்தகத்தை எடுத்தால், வெகுவிரைவாக படித்து முடித்து விடுகிறார்கள். என்னாலெல்லாம் அவ்வளவு வேகமாக வாசிக்க முடியாது. ஒரு புத்தகத்தைப் வாசித்துக்கொண்டு இருக்கும் போதே பளீரென ஒரு எண்ணம் வெட்டும். அதன் பின்னால் கிடுகிடுவென சிறிது நேரம் ஓடினால், அது தொடர்பான கடந்தகாலப் பதிவுகள் அனைத்தும் என் முன்னே வந்து கொட்டும்.