அமைதியின் சத்தம்


(சிறுகதை)
இலண்டன் மாநகருக்கு என் குடும்பத்துடன் குடியேறிக் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போது இலண்டன் மாநகரின் அழகை விவரிக்கும் மனநிலையில் எல்லாம் நான் இல்லை. இன்னும் சொல்லப்போனால் திரும்பவும் பெங்களூருக்கே போய்விடலாமா என்று கூட சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
இதற்கான காரணத்தைக் கேட்டால், இதெல்லாம் ஒரு காரணமா என்றும், இதற்குப் போய் இலண்டனை விட்டுவிட்டு எவனாவது திரும்பி வருவானா என்றும், இந்த சத்யா ஒரு பைத்தியக்காரன் என்றும் கூட உங்களுக்குத் தோணலாம்.
நான், என் மனைவி மற்றும் என்னுடைய இரண்டு மகன்களும்,   ஆறுமாதங்களுக்கு முன்புவரை வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் வசித்து வந்தோம். அதுவரை இலண்டனில் காலம் ஆனந்தமாகக் கழிந்தது.
ஆனால் அந்த வீட்டிற்கு வாடகை கொஞ்சம் அதிகம் என்பதால், தெற்கு லண்டனிலுள்ள கிராய்டன் பகுதியில் பதினான்கு தளங்களைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் ஆறாவது தளத்திலிருந்த வீட்டிற்குக் குடிபுகுந்தோம்.
இந்தச் சிறிய வீட்டிற்கு நான் கொடுக்கும் வாடகையைக் கேட்டால் உங்களுக்கு மாரடைப்பே வந்துவிடும். பெங்களூரில் கூட தற்போது வீட்டு வாடகை எகிறி எங்கோ போய்விட்டதாக என் நண்பர்கள் கூறினார்கள். இருந்தாலும், அங்கெல்லாம் நம்முடைய வருமானத்தில் ஆறில் ஒரு பங்குதான் வீட்டு வாடகைக்குப் போகும் (நான் தகவல் தொழில்நுட்பத்  துறையில் வேலை பார்ப்பவன் என்பதை மனதில் கொள்ளவும்). ஆனால் இங்கு ஐரோப்பாவில் எந்த  நாட்டில் இருந்தாலும் சரி, சம்பளத்தின் மூன்றில் ஒரு பங்கை வீட்டு வாடகைக்காக ஒதுக்கிவிட வேண்டும். அதற்குமேல், மின்சாரம், தண்ணீர், ஹீட்டிங், இத்யாதி இத்யாதிகள் வேறு.
இருந்தாலும் இவையல்ல என் பிரச்சினைக்குக் காரணங்கள்.
ஐரோப்பாவில் பெருஞ்செல்வந்தர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று எங்களை நினைத்துப் பொறாமைப்பட்டுக்கொண்டிருக்கும் உறவு நெஞ்சங்களுக்கு இவற்றையெல்லாம் விளக்கினாலும் புரியப்போவதில்லை எனும்போது, எதற்கு விளக்கி நேரத்தை வீணடிக்கவேண்டும்?.
என் பிரச்சினைக்கு வருவோம்.
என் குழந்தைகளில் ஒருவனுக்கு ஐந்து வயது, இன்னொருவனுக்கு இரண்டு வயது. இரண்டாவது மகன் இலண்டனில்தான் பிறந்தான்.
“இது ஒரு பிரச்சினையா?” என்று கேட்க வேண்டாம்.
நான் பிரச்சினை என்னவென்று சொல்வதற்கு முன்பு, முதலில் நீங்கள் என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.
குழந்தைகள் வீட்டில் அங்கும் இங்கும் ஓடுவதும், குதித்து விளையாடுவதும் தவறா?                        
“நிச்சயமாக இல்லை!” என்று நீங்கள் தலையாட்டுவது தெரிகிறது. ஓடிவிளையாடிக் குதிப்பது என்பது குழந்தைகளின் இயல்பு. ஆனால் அதற்காக அவர்களது தந்தையாகிய நான் காவல் நிலையம் மட்டுமல்ல, கோர்ட் வாசல் வரைச் சென்று வந்தேன் என்றால் உங்களால் நம்பமுடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும்! நான் சிறைக்குச் செல்லாதது மட்டும்தான் குறை.
ஒருநாள் நான் என் குழந்தைகளுடன் படுக்கையறையில்  விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென தடதடதடவென்று பூகம்பம் வந்தது போன்று ஒரு சத்தம். என் குழந்தைகள் மிரண்டுபோய் ஓடிவந்து என்னைக் கட்டியணைத்துக் கொண்டனர். யாரோ வேண்டுமென்றே சுவரைத் தட்டிச் சத்தத்தை ஏற்படுத்தியது போல இருந்தது. அந்தச் சத்தம் பக்கத்து வீட்டிலிருந்து வந்ததா, மேல்வீடு அல்லது கீழ்வீட்டிலிருந்து வந்ததா என்று என்னால் யூகிக்க முடியவில்லை.
ஒருவேளை என் மனைவிதான் சமையலறையில் ஏதாவது செய்து கொண்டிருக்கிறாளோ என்று ஹாலுக்கு வந்தால், அவள் எனக்குமேல் பதைபதைத்துக் கொண்டு ஓடிவந்து, “என்ன சத்தம்?” என்று கேட்டாள்.
“தெரியல அர்ச்சனா. பக்கத்து வீட்லர்ந்து யாரோ சொவத்த இடிக்கற மாதிரி தெரியுது.” என்றேன்.
“ஒருவேளை நீங்க மூணுபேரும் ரொம்பச் சத்தம் போட்டு விளையாடினதால வார்ன் பண்றாங்கன்னு நெனெக்கிறேன் சத்யா. கொஞ்சம் நேரம் அமைதியா இருந்து பார்க்கலாம்.” என்றாள் என் மனைவி.
அதற்குப் பிறகு அன்றைக்கு மீண்டும் அந்தச் சத்தம் கேட்கவே இல்லை.
அடுத்த நாள் மாலை வீட்டிற்குள் நுழைந்ததுமே என் மனைவி, “இன்னிக்கு மட்டும் நாலுதடவ சத்தம் வந்துச்சு சத்யா. கரெக்டா நோட் பண்ணேன். இவங்க குதிக்கறப்ப, ஒடரப்போதான் யாரோ இடிக்கறாங்க. எனக்கென்னமோ நாய்ஸ் கீழ்வீட்டிலர்ந்து வர்ற மாதிரிதான் தெரியுது. ரொம்ப அன்னாயிங்கா இருக்கு பா.” என்று எரிச்சல் பட்டுக்கொண்டாள்.
அடுத்தநாள், எனக்குத் தலைவலி அதிகமாக இருந்ததால் வழக்கத்திற்குச் சற்று முன்னதாகவே அலுவலகத்திலிருந்து கிளம்பி, ட்யூபில் வீட்டிற்குச்  சென்று கொண்டிருந்த போது, அர்ச்சனாவிடமிருந்து கைபேசி அழைப்பு வந்தது.
“சத்யா, போலீஸ் வந்திருக்கு. கொஞ்சம் சீக்கிரம் வர்றியா?” என்று அவள் சொன்னவுடன் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
“வாட்??? போலீசா? எதுக்கு?”
“அப்புறம் பேசலாம். நீ வர்றதுக்கு இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்?”
“அல்மோஸ்ட் ஸ்டேஷன் ரீச் ஆயிட்டேன். இன்னும் டென் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்.”
எனக்குத் தலைவலி போய் மாரடைப்பே வந்துவிடும் போலாகிவிட்டது. எதற்கு வந்திருப்பார்கள் என்று என்னால் சிறிதும் யூகிக்கவே முடியவில்லை. இவள் வேறு விஷயத்தைச் சொல்லாமல் புதிர் போடுகிறாள் என்று திட்டிக்கொண்டே என் நண்பனுக்கு உடனே போன் செய்தேன்.
“ஹே விச்சா, கொஞ்சம் உடனே வீட்டுக்கு வர்றியா?”
“ஆபீஸ்ல இருக்கேன் மச்சி. ஈவினிங் வரட்டுமா?”
“கொஞ்சம் அர்ஜன்ட் டா. வீட்டுக்கு பக்கத்துல தானே ஆபீஸ் இருக்கு. கொஞ்ச நேரம் வந்துட்டு போயிடேன்.”
“என்ன ஆச்சுடா?”
“நீ வா சொல்றேன்.” என்று என் மனைவி போட்ட அதே புதிரைப் போட்டுவிட்டு கைபேசியை அணைக்கவும் ஸ்டேஷன் வரவும் சரியாக இருந்தது.
ட்யூப் ரயிலிலிருந்து இறங்கி வீட்டிற்கு ஓட்டமாய் ஓடி எங்கள் குடியிருப்பிற்கு வந்து சேர்ந்தேன். குடியிருப்பு வாசலில் வோல்வோ V70 காவல்துறை வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது.
அதைக் கண்டவுடன் இன்னமும் வேகமாக ஓடிச்சென்று எலிவேட்டரைப் பிடித்து,  ஒன்று.. இரண்டு.. மூன்று.. என ஒவ்வொரு தளமாகக் கடக்கும்போதும், எனக்கு இரத்த அழுத்தம் 120.. 130.. 140.. என்று பத்தின் மடங்குகளாக ஏறிக்கொண்டிருந்தது.
ஆறு..
எலிவேட்டரின் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தேன். திறந்து கிடந்த என் வீட்டிலிருந்து சிரிப்பொலி கேட்டது.
உள்ளே நுழைந்த என்னை, “ஹலோ, வெல்கம்!” என்று கம்பீரக் குரலில் வரவேற்றனர் இரண்டு காவல் துறை அதிகாரிகள்.
“ஹலோ, அம் சத்யா!” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்களோடு கைகுலுக்கினேன்.
“யுவர் பிப்த் ப்ளோர் நெய்பர் ஹேஸ்  லாட்ஜ்ட் எ கம்ப்ளையின்ட்!” என்று கூறிய அவருடன் ஆங்கிலத்தில் உரையாடினேன்.
“என்ன புகார்?”
“உங்கள் வீட்டிலிருந்து அதிக சத்தம் வருகிறதாம். ஆனால், இதில் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. சிறுவர்கள் விளையாடிக் கொண்டுதான் இருப்பார்கள். உங்கள் மனைவியை அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்குச் சென்று பேசினோம். நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போகவேண்டும். வேறு வழியில்லை. இதில் நாங்கள் எதுவும் பெரிதாகச் செய்ய முடியாது.” என்று கூறிவிட்டுப் புறப்படத் தயாரானார்கள்.
வழியனுப்ப வெளியே வந்த எங்களுடன் கைகுலுக்கிவிட்டு, என் மனைவியிடம், “தாங்க்ஸ் பார் த கோலா!” என்று சிரித்துக்கொண்டே கூறிவிட்டுச் சென்றார்கள்.
அவர்கள் லிப்டுக்குள் சென்ற அதே சமயம், அருகிலிருந்த லிப்டிலிருந்து விச்சா வெளியே வந்தான்.
“என்னடா ஆச்சு? போலீஸ்லாம் வந்திருக்கு…” என்று பதற்றத்துடன் கேட்டான்.
நான் உடனே பின்னால் திரும்பி “என்ன அர்ச்சு ஆச்சி?” என்று என் மனைவியைக் கேட்டேன்.
“நம்ம வீட்டுக்கு கீழ்வீட்ல ஒரு வயசான கபில்ஸ் இருக்காங்க. ஹாலந்து நாட்டுக்காரங்களாம். அந்தப் பாட்டிக்கு ஏதோ ஒடம்பு முடியலையாம். போனவாரம் தான் ஹாஸ்பிடல்லர்ந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்திருக்காங்களாம். நம்ம வீட்லர்ந்து ரொம்ப நாய்ஸ் வர்றது தாங்க முடியலைன்னு கம்ப்ளைன்ட் பண்ணியிருக்காங்க.”
“நாய்ஸ் வந்தா பர்ஸ்ட் நம்ம கிட்ட சொல்ல வேண்டியதுதானே! அதுக்கு போயி போலீஸ் கிட்ட யாரவது போவாங்களா?”
“இட்ஸ் நாட் எ சர்ப்ரைஸ் பார் மி. நான் ஆம்ஸ்டர்டாம்ல நாலு வருஷம் இருந்திருக்கேன். டச்சுக்காரங்க கொஞ்ச கோவக்காரப் பசங்க டா.”
“ரெண்டு மூணு நாலா பசங்க விளையாடும்போதெல்லாம் தடதடனு சத்தம் கேட்டது மச்சி. ஆனா இதுக்கெல்லாமா போலீஸ்கிட்ட போவாங்க?”
“இந்த ஊருக்காரங்கல்லாம் அமைதி விரும்பிகள் டா!”
“என்ன அமைதியோ? அந்த தாத்தா ஒரு சார்ட் கொடுத்திருக்காரு விச்சாண்ணா” என்றாள் அர்ச்சனா.
“என்ன சார்ட்?” என்று கேட்டேன்.
“நைட் 7 மணிலர்ந்து மார்னிங் 7 வரைக்கும் பசங்க தூங்கணுமாம். அதனால அவங்களுக்கு டிஸ்டர்பன்ஸ் இருக்காதாம். மார்னிங் 8 மணிக்கு விகாஷ் ஸ்கூலுக்கு போறதால. ஆகாஷ் மட்டும் தான் வீட்ல இருப்பான். சோ, சத்தம் நிறைய வராதாம். ஈவினிங் போர் டு செவென் மட்டும் அவங்க அட்ஜஸ்ட் பண்ணிப்பாங்களாம்.”
“என்னக் கொடும சரவணன் இது?” என்று தலையில் அடித்துக்கொண்டான் விச்சா.
“அப்போ வீக்கென்டுல?” என்று என்னமோ மருத்துவரிடம் தடுப்பூசி அட்டவணையின் பேரில் இருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வது போன்று ஆர்வத்தோடு அவளிடம் கேட்டேன்.
“வீக்கென்டுல ரொம்ப சத்தம் வந்தா அவங்க அதே மாதிரி சொவத்துல த்ரீ டைம்ஸ் மட்டும் நாக் பண்ணுவாங்களாம். நாம கிட்ஸ கண்ட்ரோல் பண்ணனுமாம். இல்லைனா எங்கயாவது வெளில கூட்டிட்டு போயிடணுமாம். இந்தக் குளிருல எங்கன்னு வெளில போறது?” என்று கூறிவிட்டு தலைமேல் கைவைத்துக்கொண்டு அமர்ந்தாள் அர்ச்சனா.
அதற்குப் பிறகு, சுவரைத் தட்டி ஒலி எழுப்புவதே அவர்களுக்கு வேலையாகிவிட்டது. எங்களுக்கும் குழந்தைகளைத் திட்டித்திட்டி வெறுப்பாகிவிட்டது. அதற்கு முன்பு இதுபோன்றெல்லாம் என் குழந்தைகளைத்  திட்டியதே இல்லை. அர்ச்சனா ஒருமுறை மிகவும் எரிச்சலடைந்து விகாஷை நன்றாக அடித்தேவிட்டாள். இப்போதெல்லாம் இங்கு குழந்தைகளைத் கண்டிப்பதற்குக்கூட பயமாய் இருக்கிறது. பெற்றோர்களைச் சிறையில் அடைத்துவிடுகிறார்கள்.
இப்படியே இரண்டு வாரங்கள் ஓடிவிட்டது.
“டைரக்டர் பாக்யராஜுக்கு மட்டும் இந்த மேட்டர் தெரிஞ்சா ‘சுவரின் மேல் சத்தங்கள்’ னு ஒரு படமே எடுத்துடுவார் மச்சி.” என்று விச்சா கிண்டல் செய்துவிட்டுச் சிரித்தான்.
“டேய். நான் டென்ஷன்ல இருக்கேன் உனக்கு நக்கலா?”
“ஒரு ஐடியா! அவங்க ஒருமுறை போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணாங்கல்ல. இப்போ நாம ஒருமுறை போய், கீழ்வீட்டுக்காரங்க ரொம்ப நாய்ஸ் பண்ணி மென்டல் டார்ச்சர் பண்றாங்க. என்னோட கிட்ஸ் ஆர் கெட்டிங் வெரி நெர்வஸ்னு கம்ப்ளைன்ட் பண்ணிப் பாக்கலாமா?” என்றான்.
நானும் அர்ச்சனாவும் யோசித்துக்கொண்டிருந்தபோது அவனே இன்னொரு யோசனையும் வழங்கினான், “பசங்கள விளையாடவிட்டு அவங்க தட்டும்போது வீடியோ எடுக்கலாம். அப்போ தான் அவங்களுக்கு அந்தச் சத்தத்தோட இம்சை புரியும்!”
எங்களுக்கும் அது சரியெனப் பட்டதால் அவன் கூறியபடியே செய்து, வீடியோ ஆதாரங்களோடு போலீசில் புகார் செய்தோம்.
அதிகாரிகள் மீண்டும் ஒருமுறை இரண்டு வீட்டிற்கும் வந்து பார்வையிட்டு விட்டு, கோலா குடித்து விட்டு, அதே அறிவுரையை வழங்கி விட்டுச் சென்று விட்டனர்.
அதற்குப் பிறகுதான் பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்தது. தாத்தா கிராய்டன் கவுன்சிலுக்குச் சென்று மேல்முறையீடு செய்துவிட்டார். கவுன்சிலின் தடுப்புச் சேவை மையத்தில் (prevention service) எங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்க ஒரு அதிகாரியை நியமித்தார்கள்.
அவர் முதலில் அவர்களுடன் பேசுவாராம். பின்னர் எங்களிடம் பேசுவாராம். அதற்குப் பிறகு எங்கள் இருவரையும் அழைத்துப் பேசுவாராம். இந்தப் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட ஒரு நான்கு கட்டங்களாக நடக்குமாம்.
முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு நானும், கிச்சாவும் சென்றோம். அதிகாரி மிகவும் நல்லவர். நாங்கள் சொன்னதற்கெல்லாம் தலையாட்டினார். நாங்கள் சொல்லுவதுதான் மிகச்சரி என்பது போலப் பேசினார்.
“இவரு அவுங்களுக்கும் இதே மாதிரிதான் தலையாட்டுவார் போல இருக்குடா. பேசாம ஏன் நாம அந்தத் தாத்தா கிட்டயே போயி பேசக்கூடாது?” என்று மற்றுமொரு யோசனையைக் கொடுத்தான் கிச்சா.
அன்று மாலையே நானும் கிச்சாவும் ஐந்தாம் தளத்திலிருக்கும் அந்த ஹாலந்து தம்பதியினர் வீட்டிற்குச் சென்று அழைப்பு மணியை அழுத்தினோம்.
சிறிது நேரம் கழித்துக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தது ஒரு வெள்ளைக் கிழ உருவம்.
எங்களைப் பார்த்த அடுத்த நொடி அவரது முகம் சிவந்தது. எங்கே கதவை மடாரெனச் சாத்திவிட்டு உள்ளே சென்றுவிடுவாரோ என்று நினைத்த அடுத்த கணம், “கம் இன்” என்றார்.
நாங்கள் இருவரும் சிரித்துக்கொண்டே உள்ளேச் சென்று, கைகுலுக்கி எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.
எங்களை ஹாலுக்கு அழைத்துச் சென்றார். அந்த வீடே கிட்டத்தட்ட ஒரு அருங்காட்சியகம் போலக் காட்சியளித்தது. அவ்வளவு நேர்த்தியாக அத்தனைப் பொருட்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
ஒரு மயான அமைதி குடிகொண்டிருந்த அந்த வீட்டில் ஏதோ மெல்லிய சத்தம் வந்து கொண்டிருந்ததை உணர்ந்தோம். என்னவென்று திரும்பிப் பார்த்தால், அந்த வீட்டின் மூலையில் ஒரு பாட்டி சாய்வு நாற்காலியில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அந்த டிவியின் ஓசைக் கூட கேட்கவில்லை. இப்படி ஒரு சூழலில் என் குழந்தைகள் குதித்தால் மட்டும் இல்லை, வாயு பிரித்தால் கூட ராக்கெட் ஏவும் சத்தம் கேட்கும் அந்த வீட்டில்.
தாத்தா ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்.
“என் மனைவி சில நாட்களுக்கு முன்னால்தான் சிகிச்சை முடித்துக்கொண்டு மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்திருக்கிறாள். ஏன் இப்படி எங்களுக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? பேசாமல் நீங்கள் வீட்டை காலி செய்துகொண்டு போய்விடுங்கள். நான் வேண்டுமானால் எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொள்கிறேன்.” என்று சற்றுச் சூடாகவே வார்த்தைகளை வீசினார்.
அவர் பேசிய விதம் என்னைச் சினம் கொள்ளவைத்தாலும், அந்தப் பாட்டியின் நிலைமை பார்க்கப் பரிதாபமாக இருந்ததால் என்னை நானே அமைதிப்படுத்திக்கொண்டேன்.
கிச்சா மட்டும் அவரிடம் பணிவாகப் பேசினான்.
“யூ ஆர் லைக் அவர் பேரன்ட்ஸ். ஹிஸ் சன்ஸ் ஆர் ஸ்மால் கிட்ஸ். சோ பிளீஸ் அட்ஜஸ்ட்!” என்று அவன் சொன்ன அடுத்த கணம், மேலே என் வீட்டிலிருந்து மெல்லியதாக தட்தட்டென்று சத்தம் கேட்டது.
அவ்வளவுதான். ”டிட் யூ ஹியர்? டிட் யூ ஹியர்?” என்று கத்திக்கொண்டே கிழவர் மேஜையின் மேலிருந்த ஒரு கட்டையை எடுத்து சுவரில் தம்தம்மென்று அடித்தார்.
எங்களிருவருக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது. அதற்காகவே அந்தக் கட்டையை வாங்கி வைத்திருக்கிறார் என்று தோன்றியது. எனக்கென்னவோ என் குழந்தைகள் எழுப்பும் சத்தத்தை விட, இந்தச் சத்தம்தான் அந்தப் பாட்டிக்குப் பெருந்தொல்லையாய் இருக்கும் போலத் தோன்றியது.
அந்தப் பாட்டி உடனே அழ ஆரம்பித்துவிட்டார். அதைப் பார்த்தவுடன் அந்தக் கிழவர் இன்னும் எரிச்சலடைந்து எங்களைப் பார்த்து, “’டாட் பர்டோமெ’. கோ டு யுவர் கன்ட்ரி” என்று கத்தினார்.
“ஹூ ஆர் யூ டு சே திஸ்? ஐ நோ டச்சு! டேக் பேக் யுவர் வேர்ட்ஸ்! சே சாரி!” என்று நேரம் காலம் புரியாமல் கிச்சா திடீரெனக் கத்திக் குதிக்க ஆரம்பித்து விட்டான்.
போனை வேறு உயர்த்தி, “நாங்க எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணி இருக்கோம். கோர்டுக்கு போவோம்” என்று சத்தம் போட்டவனை அப்படியே பிடித்து வெளியே இழுத்து வந்துவிட்டேன்.
அந்தக் கிழவரும் அவர் தரப்பிற்கு உள்ளே டச்சு மொழியில் விதம்விதமாய் வசவுகளை வீசிக்கொண்டிருந்தார்.
“ஏண்டா இப்படி பண்ண? பாவன்டா அந்தப் பாட்டி! அழறாங்க!” என்றேன்.
“உனக்கு ‘டாட் பர்டோமெ’ னா என்னனு தெரியுமாடா? எனக்கு டச்சு தெரியும். இதுல வேற உன் நாட்டுக்கு போங்கறான். நான் எதுக்கு போகணும். நான் இங்க டேக்ஸ் கட்டறேன். அவன் என் டேக்ஸ்ல பென்ஷன் வாங்கிட்டு இருக்கான்.”
“அதுவாடா இப்போ முக்கியம்? பெங்களூர்ல இருக்கும்போது கூடத்தான் எவ்ளோ ஆட்டோகாரங்க கன்னடத்துல கன்றாவியா திட்டி இருக்காங்க. இந்தியாவிலயே சகிச்சிக்கிட்டு வாழறோம். இது வெளிநாடு. இங்க பொழப்பு தேடி வந்திருக்கோம். இதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கனுண்டா. இது அவங்க எடம். நாளைக்கு பிரச்சினை வந்தா நமக்காக யாரும் வரமாட்டாங்க.”
“பேசாம நீ வீட்ட காலி பண்ணிடு மச்சான்! என் வீட்டுக்கு வந்துடு. ப்ரவென்ஷன் செர்வீசும் வேணாம், ஒரு மண்ணும் வேணா.”
“இது கரெக்ட் அப்ரோச். அந்த ஆள் நிலமைய கொஞ்சம் யோசிச்சு பாரு. எல்லா எக்ஸ்பென்சசும் நானே பாத்துக்குறேன். காலி பண்ணுங்கறான். அப்படின்னா அவங்களுக்கு எவ்ளோ கஷ்டம் இருக்குமோ? நான் வேற வீடு தேடறேன். அதுக்கு மட்டும் நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணினா போதும்.”
“ஷூர் டா! இன்னைக்கே தேட ஆரம்பிக்கலாம்” என்று கூறிய அவனை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன்.
இப்படியாக மூன்று வாரம் ஓடிவிட்டது. ஆனால் அந்த ‘சுவர் சத்தம்’ மட்டும் ஓய்ந்தபாடில்லை. அதோடு வாழப் பழகிக் கொண்டோம் என்று கூடச் சொல்லலாம். ஆனால், அர்ச்சனாவை நினைத்தால்தான் சிறிது வேதனையாக  இருந்தது. நானாவது வாரநாட்களில்  அலுவலகத்திற்குச் சென்று விடுவேன். அவளுக்கு இருந்த மன உளைச்சலை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அவளுக்காகவே தீவிரமாக வீடு தேடினோம் நானும் கிச்சாவும்.
இப்படியிருக்க, ஒருநாள் கவுன்சிலிலிருந்து எங்களுடைய அதிகாரி தொடர்பு கொண்டு, இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்காக என்னை அழைத்தார். நான் வேறு வீடு பார்த்துக்கொண்டிருப்பதாகக் கூறி இந்தச் சேவை வேண்டாமென்று மறுத்துவிட்டேன். அவரும் எனது முடிவைப் பாராட்டினார். அது ஒன்றுதான் சரியான வழி என்றும், அந்தப் பெரியவருக்கு அதை தானே தெரிவித்துவிடுவதாகவும் கூறினார்.
ஒரு சனிக்கிழமை.
குழந்தைகள் எப்போதும் போலக் குதித்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அர்ச்சனா, “என்ன இன்னைக்கு காலைலர்ந்து பெருசுங்க சத்தமே காணோம். எங்கயாச்சும் வெளிய போயிட்டாங்களா?” என்றாள்.
“கரெக்ட். அதிசயமா இருக்கு. இன்னைக்கு மழை பேயும்.” என்று கூறிவிட்டு ஜன்னலினூடே வெளியே பார்த்தேன். அன்றைக்கு கிராய்டன் வட்டாரமே எனக்கு அவ்வளவு அழகாய்த் தெரிந்தது.
“சத்யா, பாத் டப்ல தண்ணி தேங்குது. கொஞ்சம் சிண்டிகஸ்ல சொல்லிடேன். நாளைக்கு ஹாலிடே. அப்புறம் மன்டே வரைக்கும் கஷ்டம்.” என்றாள்.
நான் கீழே சென்று, எங்கள் குடியிருப்பு பராமரிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்துவிட்டு திரும்பும்போது, ஐந்தாவது தளத்தில் வசிக்கும் தெலுங்கு நண்பர் ஒருவர் எதிர்ப்பட்டார்.
அவரிடம் அவ்வளவாக நான் பேசியது கிடையாது. ஆனால் அன்றைக்கு அவராகவே என்னருகே வந்து, “விஷயம் தெரியுமா சத்யா?” என்று கேட்ட விதத்திலும், பார்த்த பார்வையிலும், ஏதோ கெட்ட செய்தி கொண்டு வந்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது.
“என்ன விஷயம் சதீஷ்” என்று வினவினேன்.
“எங்க ப்ளோர்ல இருக்கற பாட்டி இன்னைக்கு விடிகாலைல செத்துப் போச்சாம். இன்னைக்கு மார்னிங் ப்யூனரல் ஹோமுக்கு பாடிய தூக்கிட்டு போனப்பப் பாத்தேன்.”
சதீஷ் சொன்னதைக் கேட்டவுடன் அதிர்ந்து போனேன். அவனுக்குப் பதில் சொல்ல எனக்கு வாயெழவில்லை. “ஓ. அப்படியா? சாரி டு ஹியர்.” என்று வெறுமனே கூறிவிட்டுத் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். எனது கைகள் நடுங்க ஆரம்பித்தன; கால்களின் நடை தளர்வடைந்தது. வீட்டிற்குச் செல்வதற்கே சிறிது கலக்கமாக இருந்தது. எங்கள் குடியிருப்பில் இருந்த பூங்காவில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு, வீட்டிற்குச் சென்று அர்ச்சனாவிடம் கூட எதுவும் சொல்லாமல் அப்படியே நாற்காலியில் சரிந்தேன்.
குழந்தைகள் இங்குமங்கும் ஓடிக் குதித்து விளையாடி ஒலி எழுப்பிக்கொண்டிருந்ததனர்.
ஆனால் என் செவிகள் ஐந்தாவது தளத்திலிருந்து வழக்கமாக வரும் சுவரின் சத்தத்தையே தேடிக்கொண்டிருந்தன.  அவைகளுக்கு நிசப்தம் மட்டுமே பதிலாகக் கிடைத்துக்கொண்டிருந்தது. 

கருத்துகள்

  1. அங்குள்ள நடைமுறைகள் இது தானே...? என்று நினைக்கத் தோன்றும் போது... "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா...?"

    சுவரின் சத்தம் (மனதில் கேட்கிறது...) மனதை கனக்க செய்தது... ஆமாம் இது கதை தானே...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. வணக்கம் நண்பர் தனபாலன்.

      சரியாய் சொன்னீர்கள்! 'சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரப் போல வராது!'

      கதை - பெல்ஜியத்தில் என் தமிழ் நண்பர் ஒருவரின் வாழ்வில் நடந்த ஒன்று; அதில் புனைவு கலந்து படைத்திருக்கிறேன். அந்தப் பெண்மணி இறந்த தினம் உண்மையில் அவர் வீட்டிற்கே செல்லவில்லை. குடும்பத்தோடு எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார். மறக்க முடியாத நாள். அந்தப் பெண்மணியின் வீட்டாரை விட அதிகாய் அன்று அழுதவர் என் நண்பரின் மனைவியாய்த்தான் இருக்கும்.

      அமைதி, ஓசையை விட வலிமையானது என்பதை நான் உணர்ந்த நாள் அது!

      நீக்கு
  2. மனிதாபிமானம் மிக்க கதை.. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..