மர்ம பாலம்

அது ஒரு நீண்ட பாலம்.
அவனொரு விந்தை மனிதன்.
பாலத்தை கடக்க
அடியெடுத்து வைத்த ஒருவனுக்காய்
மகிழ்வுற்றான் -
வாழ்த்தினான்.
பாலத்தை கடந்து
விலகிப் போன ஒருவனுக்காய்
துயருற்றான் -
பிரார்த்தித்தான்.
பாலத்தின் நடுவே
கடக்கவியலாமல் அயர்வுற்று
விடைபெற்ற வேறொருவனுக்காய்
மீளாத்துயருற்றான்.
பிரார்த்தித்தான்.
அவனும் அதே பாலத்தின்
ஏதோ ஒரு புள்ளியில்
நின்றுகொண்டு
தெளிவாகத் தெரியுமந்த
பாலத்தின் மறுமுனைக்கும்
தனக்குமான தூரத்திற்கு
எதிர்காலம் எனப்பெயர் வைத்து,
அது வருவதற்குள் முடித்துவிட
ஒரு நீண்ட பட்டியலொன்றை
தயாரித்தான்.
எண்ணற்ற கனவுகளும்
எண்ணற்ற கவலைகளும்
எண்ணற்ற எதிர்பார்ப்புகளும்
எண்ணற்ற ஏக்கங்களும்
எண்ணற்ற திட்டங்களும்
எண்ணற்ற குறிக்கோள்களும்
நிறைந்த பட்டியல் அது.
பாரம் நிறைந்த அந்தப் பட்டியலை
தன் தலையில் சுமந்துகொண்டு
பாலத்தின் மறுமுனை நோக்கிய
தன்னுடைய பயணத்திற்கு
வாழ்க்கை என்றொரு பெயர் வைத்தான்.
எண்ணற்ற உறவுகளும்
எண்ணற்ற துரோகங்களும்
எண்ணற்ற மகிழ்ச்சிகளும்
எண்ணற்ற துயரங்களும்
எண்ணற்ற சாதனைகளும்
எண்ணற்ற சோதனைகளும்
எண்ணற்ற அனுபவங்களும்
எண்ணற்ற பாடங்களும்
நிறைந்த பயணம் அது.
பயணத்தின் நடுவே
பட்டியல் நீண்டுகொண்டே போனது.
பயணத்தின் சுமை
கூடிக்கொண்டே போனது.
நடையின் வேகம் குறைந்து
மெதுவாக பயணித்து
முன்சென்று கொண்டிருந்தான்
அந்த விந்தை மனிதன்!
நடந்து நடந்து அவனுடல்
ஓய்ந்துகொண்டே போக
அவன் உருவாக்கிய எதிர்காலம்
தேய்ந்துகொண்டே போனது.
பாலத்தின் மறுமுனையும் வந்தது
அங்கே மலைபோல் குவிந்து கிடந்த
பட்டியல்களின் மேல்
எடை பன்மடங்கு கூடியிருந்த
தன பட்டியலையும்
இறக்கி வைத்துவிட்டு,
திரும்பிப் பார்த்தான்.
அந்தப் பாலம் -
காணாமல் போயிருந்தது.
அவனைப் பார்த்து -
மர்மமாய் புன்னகைத்தது
வெற்றிடம்!

(எண்ணத்தூறல்)

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..